கோவை வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதில் கையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே சங்கிலிரோடு எஸ்டேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். சங்கிலி ரோடு எஸ்டேட் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வட மாநில தொழிலாளியான பாப்பையா என்பவரது மகன் ஆகாஷ்(5) இன்று காலையில் வீட்டின் முன்பு தேயிலை தோட்டம் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் சிறுத்தையை விரட்டி விட்டு சிறுவனை காப்பாற்றினார்.
இதனையடுத்து, சிறுவனை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.