கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து பெற்றவர்களிடம் இருந்து மீட்டு, நிலம் இல்லாத மக்களுக்கு பெற்றுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி அடுத்த ஒடையகுளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் சக்தி நகர் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு 196 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இந்த இடத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட சிலர், அங்கு வீடு கட்டி குடியேறாமல் நிலத்தை விற்றுள்ளனர்.
பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டதாகவும் கூறி நிலம் கிடைக்காத ஆதி திராவிடர் மக்கள், மகாத்மா காந்தி ஆசிரமத்தினருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், ஆதி திராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணத்தாசை காட்டி அவர்களிடம் குறைந்த விலைக்கு பெற்று வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப பெற்று, உரிய விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறிந்து, நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு பெற்று தர வேண்டும், என்றனர்.