கோவையில் மெட்ரோ ரயில் திட்டதிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை சொந்த மாநிலத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஐ.டி.பார்க் அமைக்கப்படும். எழில்மிகு கோவை என்ற சிறப்பான திட்டம் - நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக, கோவையில் நடந்த புதுமைப்பெண் திட்டத்தின் பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அதில், புதுமை பெண் திட்டத்திற்கு பாராட்டு விழா, ஆனால் ரொம்ப இறுக்கமாக மாணவிகள் உள்ளனர், நல்ல நாள் சந்தோஷமாக இருங்கள். அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் 452 மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் நிதி நிலை ரொம்ப மோசமாக இருந்தது. அப்பொழுதும் தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் நினைத்தார். கல்வியிலும் சரி, பொது வாழ்விலும் சரி, வாழ்ந்துகாட்டியவர் அவினாசிலிங்கம். 8500 பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் பயில்கின்றனர். சிறப்பாக கல்வியினை அளித்து வருகின்றனர் என்றார்.
கல்வி நிறுவனம் அமைந்துள்ள சாலையில் ஐயாவின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளி கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு ? என்று மாணவிகளைப்பார்த்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். அப்போது, மாணவிகள் அனைவரும் அமைதியாக இருந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் அதிகபட்சம் இந்த ஆண்டுதான் கல்விக்கு அதிக தொகை பட்ஜெட்டில்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டில் எவ்வளவு அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது? 39 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி, பள்ளி கல்வித்துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன.
அரசின் திட்டங்கள் எந்த அளவு உள்ளது என்பதை நாமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகதான் தொடர்ந்து உங்களிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றேன். 7 ஆயிரம் கோடி மகளிர் உரிமை தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி, வேளாண்மை போன்றவற்றிற்கும் அதிக அளவில் இந்த முறை நிதிநிலை அறிக்கை உள்ளது. நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் பிறந்தநாளன்று துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் என்ன? மெட்ரோ ரயில் திட்டதிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வேலை வாய்ப்பை சொந்த மாநிலத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஐ.டி.பார்க் அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். எழில் மிகு கோவை என்ற சிறப்பான திட்டம் - நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசின் நிதி நிலை அறிக்கை பற்றி மாணவிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.