கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வெயில் அதிகரித்துள்ளதன் காரணமாகவும், பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வுகள் காரணமாகவும், உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பூர்: உடுமலை அருகே பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீக வாதிகள் என பலரும் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இங்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். வெயில் காரணமாக அருவியில் மிதமான அளவே தண்ணீர் கொட்டுகிறது. மேலும் தற்போது பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் நடந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் பஞ்சலிங்க அருவி வெறிச்சோடி கிடக்கிறது. கடும் வெயில் கொளுத்துவதால் உள்ளுர் மக்கள் மட்டும் அவ்வப்போது வந்து குளித்து செல்கின்றனர்.