துடியலூரை அருகே அட்டை பெட்டிகள் ஏற்றிச்சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த நிலையில், இளைஞர் ஒருவர் துணிச்சலாக லாரியை ஒதுக்குப்புறமாக எடுத்துச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே அட்டைப்பெட்டிகள் ஏற்றிச்சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கோவில்பாளையத்தில் இருந்து லாரி ஒன்று, அட்டைப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு கவுண்டம்பாளையம் நோக்கி சென்றுள்ளது. லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்த லாரியில் அவருடன் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்களும் வந்துள்ளனர்.
இந்நிலையில், லாரியானது துடியலூர் அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் வரும் போது எதிரே வந்த பேருந்துக்கு வழி விடுவதற்காக லாரியை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரம் இருந்த தனியார் கம்பெனியின் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பியில் அட்டைப் பெட்டிகள் உரசியுள்ளது.
அப்போது டிரான்ஸ்பார்மரில் பயங்கர சத்தம் ஏற்பட்டு அட்டைப் பெட்டிகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் எச்சரித்தால் உடனடியாக லாரி ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவர்கள் கீழே இறங்கி உயிர் தப்பினர்.
சாலையில் நின்ற லாரியில் தீ மளமளவென பரவிய நிலையில், அருகில் செல்ல அனைவரும் அச்சமடைந்த நிலையில் அங்கிருந்த பாலகிருஷ்ணன் என்ற இளைஞர் துணிச்சலாக தீ எரிந்து கொண்டிருந்த லாரியில் ஏரி லாரியை ஸ்டார்ட் செய்து அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கவுண்டம்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் தனசேகரபாண்டியன் மற்றும் ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான தீயணப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் ஜேசிபி வாகனம் வரவழைப்பட்டு லாரியில் இருந்த அட்டைப் பெட்டிகளை கீழே இழுத்து போட்டு தீயை அணைத்தனர்.