தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித மக்கள் நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆளுங்கட்சியினர் கடந்த ஆட்சியைப் பற்றி விமர்சிக்காமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோவை எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கோவைப்புதூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது.
அதில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள் மற்றும் நீர் மோர் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அதிமுக மட்டும்தான் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல்களை அமைத்து உதவி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், கோவைக்கு என்றைக்கும் நல்ல பல திட்டங்களை கொடுத்தது அதிமுகதான். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் கோவைக்கு கொண்டு வரவில்லை. ஏற்கனவே அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் தற்போதைய தமிழக அரசு வேகமாக முடிப்பதில்லை.
அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இனிமேலாவது விடியா அரசு விழித்துக்கொண்டு மக்கள் பிரச்சனைகளை பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும். ஒட்டுமொத்தமாக திமுகவின் மீது பெரும் அதிருப்தி உள்ளதால் எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். தற்பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களைப் பற்றி தெரியாத விளம்பர முதல்வராக இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிகைத்துறை மிரட்டப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமான செய்திகளை வெளியிடுமாறு அச்சுறுத்தப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் சாலை பணிகள் மட்டுமல்லாது பல்வேறு திட்டப் பணிகளை செய்து கோவையை மாற்றி அமைத்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் செய்யவில்லை எனவும் ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளைக்கூட மூடி சரி செய்யவில்லை எனவும் , மீடியாவிற்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆளுங்கட்சியினர் பதிலளித்துவிட்டு செல்வதாகவும் அப்போது அவர் விமர்சித்தார்.
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத திட்டங்களை அதிமுக ஆட்சியின்போது செய்தது மக்களுக்கு தெரியும் எனவும் கடந்த ஆட்சியை பற்றி குறை கூறாமல் மக்களுக்கு தேவையானவற்றை ஆளுங்கட்சியினர் செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.