கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பயன்படுத்த முடியாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ராமகிருஷ்ணா மிஷின் அருகில், கார் ஒன்று நேற்று நள்ளிரவு பாலத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். காரில் கோவையை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அசோக் ஆகிய இருவர் பயணித்துள்ளனர்.
இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று கொண்டிருக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலும் காரை ஓட்டி வந்த சுப்பிரமணி என்பவர், தூக்கத்தில் இருந்ததாகவும் அதனால் விபத்து நிகழ்ந்ததாகவும், மேலும் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் அருகே தடுப்புகள் அமைக்கப்படாததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.