பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கோவை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக வினர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதே சமயத்தில் ராகுல் காந்தி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்காக கோவை ரயில் நிலையம் வந்தடைந்த சுமார் 50 மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து சாலையில் அமர்ந்த காங்கிரஸ் கட்சியினர், கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.
இதனால் கோவை ரயில் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.