பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுநர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம், பான்பராக், பான் மசாலா, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை உள்ளிட்டவை குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரவு நேரத்தில் இயக்கப்படும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓட்டுநர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம் குறித்தும், பல ஓட்டுனர்கள் பயன்படுத்தும் பான்பராக், பான் மசாலா, புகையிலை போன்ற தேவையில்லாத போதை பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்றும்,
போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார். மேலும், நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்ல வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும் என்றும் முருகானந்தம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான ஓட்டுனர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகண்ணன், டாக்டர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.