கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து பொதுமக்கள் மகாலிங்கபுரம் குடிநீர் வடிகால்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதால் பொதுமக்கள் குடிநீரின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றியிட்டு மனு அளிக்க வந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்தும் குடிநீர் 20 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால் குடிநீர் இன்றி மாக்கினாம்பட்டி ஊராட்சியில் உள்ள வைகை நகர், பாலாஜி நகர், கந்தசாமிபுரம் போன்ற பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், தற்போது அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், சின்னாபாளையம் ஊராட்சியிலும் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.