திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூர் கிராம மக்கள், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் லிங்கம நாயக்கன் புதூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இலவச வீட்டு மனை பட்டா இல்லாமல் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு வழங்கியும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் லிங்கம்நாயக்கன்புதூரில் உள்ள தரிசு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சமையல் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
நாங்கள் இலவச வீட்டு மனைப்பட்டாக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட வருவாய் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். ஆகையால், வீட்டுமனை இல்லாத காரணத்தால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம்.
இப்பகுதியில் உள்ள தரிசு நிலமாக உள்ள பகுதியில் வீட்டுமனை பட்டா உடனே வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தற்சமயம் சமையல் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.