அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகள் ஓரளவு நலமடைந்து பொதுசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்ப்டடு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உருதுப் பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் செல்லும் வழியில் சேலம் அருகே உயிரிழந்தார்.
இந்த நிலையிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மூன்று மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஓரளவு நலமடைந்து பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
அந்த மாணவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையில், சிறுமிகள் உடல் நலம் தேறியுள்ளதாகவும், விரைவில் வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.