தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக 6.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தபட்ட நிலையில், இதுவரையில் அதற்கான இழப்பீடு மற்றும் வாடகை, நிவாரணம் தரவில்லை என விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா வரை மின்சாரம் கொண்டுசெல்ல மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்தது. இந்த நிலையில் கேரளாவில் புதைவழித் திட்டத்தின் அடிப்படையில் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.கேராளாவை போலில்லாமல் தமிழ்நாட்டில், விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு. திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கான 6.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலங்கள் பெரும்பாலும் தென்னை, வாழை, கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்ட நிலங்கள். இதை எதிர்த்து கடுமையாக போராடிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தருவதாக தெரிவித்து, நிலம் கையகப்படுத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
நான்கு வருடங்களுக்குமுன் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போராட்டம் இன்றும் தொடர்வது குறித்து சிம்பிளிசிட்டி சிறப்பு செய்திக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போராட்ட களத்தில் இருந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து சிம்பிளிசிட்டி சிறப்பு செய்தி குழு கள நிலவரத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி, உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலங்களுக்கான நிவாரணம், வாடகை உள்ளிட்டவை முறையாக முழுமையாக தரப்படவில்லை. உயர்மின் கோபுரம் அமைப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தினுடைய ஒட்டுமொத்த மதிப்பும் குறைந்துள்ளது.
நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனாலே உயர்மின் கோபுரங்களை நிலத்தில் அமைக்காமல் சாலை ஓரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டுமென போராட்ட குழுவினர், விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.உயர்மின் கோபுரத்தால் நிலத்தின் மதிப்பே போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தினால் நிலத்திற்கான மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அது மிக மிகக்குறைவு என குற்றம்சாட்டும் விவசாயிகள், சட்டப்படியான இழப்பீடுகள் வராததால் மிக மிகக் குறைந்த இழப்பீடுகளையே இதுவரை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டப்படுகின்ற தென்னை மரங்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தரப்படுகின்றது. ஆனால் உயர்மின் திட்டத்திற்கு வெட்டப்படும் மரங்களுக்கு ரூ.32,000 மட்டுமே தரப்படுகின்றது. இது நெஞ்சாலைதுறை நிவாரணத்தை விட 100% குறைவானது.
மத்திய, மாநில அரசுகள்திட்டங்களுக்காக கையகப்படுத்துகின்ற நிலங்களுக்கான நிவாரணம் நிர்ணயம் குறித்தான சட்டம் 2006இல் இயற்றப்பட்டுள்ளபோதும், இதுவரை அமல்படுத்தாமல் காலம்கடத்திவருகிறது. எனவே, சட்டப்படியான பயன்களைத் தராமல் நிறுத்திவைத்துள்ளதை கண்டிக்கும் விவசாயிகள், புதிதாக எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும், சட்டத்தின் அடிப்படையிலேயே நிவாரணம் கேட்பதாகவும் கூறுகின்றனர்.
கடந்த ஆட்சி காலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும், வாடகை வழங்கப்படும்"3 என்று அறிவித்திருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்தபிறகு போராட்ட குழு விவசாயிகள் இரண்டு முறை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, 12 முறை சந்தித்து மனு தந்து வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
முந்தைய ஆட்சி காலத்தில் விவசாயிகள் 14 திட்டங்களுக்கு எதிராக போராடிய நிலையில், விவசாயிகள் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 42பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் மற்ற போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, உயர் மின் கோபுரங்களை அமைக்க ஜனநாய ரீதியில் அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், நிலத்தில் போராட்டம் ஒருபுறம், நீதிமன்றத்தில் வழக்கு மறுபுறம் என்ற மன நிலையில் நிம்மதியின்றி தவித்துவருவதாகவும் அவர்கள் புலம்புகின்றனர்.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. அதனடிப்படையில் உயர்மின் கோபுரங்களுக்கு உரிய வாடகை தர வேண்டும், நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான நிவாரணம் தர வேண்டும், விவசாயிகளுக்கு சட்டப்படி உரிமையான நூறு சதவீத கருணைத்தொகை தர வேண்டும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்,
<image>
வாடகை நிர்ணயம் செய்யும் பணியை இதுவரை யாரும் செய்யாத நிலையில், உடனடியாக இதற்கு அரசாணை வெளியிட்டு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் விவசாயிகள் சங்க பிரதிரிதிகள் மற்றும் போராட்ட குழுவின் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்ற அரசு தாமதிக்கும் பட்சத்தில் போராட்டம் வெடிக்கும் என சிம்பிளிசிட்டி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவிப்பதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.