கோவை பன்னிமடை அருகே ஆண்டாள் அவென்யூவில் பிரபாகரன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: பன்னிமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (51). தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் நேற்றைய தினம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கவுண்டம் பாளையத்தில் உள்ள கோவில் விழாவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் உள்ள பீரோக்கள் திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்துள்ளது.
மேலும் பீரோவில் இருந்த தங்க வளையல், மோதிரம், கம்மல் மற்றும் நெக்லஸ் என சுமார் 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக தடாகம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் போலீசார் உடனடியாக கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.
மேலும் அருகிலுள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தபொது அதிகாலை 2 மணியளவில் திருடர்கள் வந்து திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.