திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணாறு சாலையில் நள்ளிரவில் வந்த பேருந்தை வழிமறித்த ‘படையப்பா' யானை, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கிவிட்டு சென்றது. இதை பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரளா எல்லை பகுதியான மறையூர் பகுதியில்படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலம். மறையூர் மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக இந்த யானை அவ்வப்போது உலாவரும்.
குறிப்பாகபொதுமக்கள் நடமாடும் பேருந்து நிலையம், தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை இந்த படையப்பா யானை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் படையப்பா யானை செயல்படுகிறது.
இதற்கிடையில், உடுமலை மறையூர் சாலையில் நள்ளிரவு திருவனந்தபுரத்தில் இருந்து பழநி சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தை படையப்பா காட்டுயானை திடீரென வழிமறித்தது.
பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கியது. ஆனால் டிரைவர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பேருந்தைஇயக்கி கடந்து சென்றார்.
இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.