கோவையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் ஜிஎஸ்டி நம்பரை தவறாக பயன்படுத்தி, லட்சக் கணக்கில் நூதனமாக மோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர் கள்ளநோட்டுகள் அச்சடித்ததும் தெரியவந்தது.
கோவை: கோவையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஜி.எஸ்.டி எண்களை வைத்து பல லட்சம் ரூபாய் நூதனமாக மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவையில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான மகாலட்சுமி ஏஜென்சி நிறுவனத்தின் மேலாளர் கண்ணன், தங்கள் நிறுவன ஜிஎஸ்டி நம்பரை யாரோ தவறாக பயன்படுத்தி பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 465, 468, 471, 420, 66 (டி) ஐடி வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் ஜிஎஸ்டி நம்பரை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக, கூடுதலாக மூன்று புகார்கள் சைபர் கிரைமில் பதிவானது.
இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வழக்கின் விவரங்களை ஆராய்ந்து பார்த்த நிலையில் குற்றவாளியை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் சிவராஜ் பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் உள்ளடக்கிய தனிப்படை இவ்வழக்கினை கையில் எடுத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.
அதன் அடிப்படையில் மகாலட்சுமி ஏஜென்சீஸ் உள்ளிட்டோரின் ஜிஎஸ்டி நம்பரை தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர், பண பரிவர்த்தனைக்காக, ஜிஎஸ்டியுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அலைபேசி நம்பர்களை ட்ராக் செய்தனர். அப்போது அடிக்கடி குற்றவாளி சிம்மை மாற்றியதால், கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் எஸ்.கே.டிரேடர்ஸ் என்ற கம்பெனியின் உரிமையாளரான சீனிவாசனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜிஎஸ்டி நம்பரை தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் மூன்றாம் வகுப்பு வரை படித்ததாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் நல்ல விவரம் கொண்ட இவர், முன்னணி நிறுவனங்களின் ஜிஎஸ்டி நம்பர்களை இணையத்தில் பார்த்து குறித்து வைத்துக் கொள்வார். இந்த நிலையில் ஹாடுவேர், எலக்ட்ரிக், மெசினரிஸ் எனப் பல துறைகளை சார்ந்து தொழில் செய்வது போன்று விசிட்டிங் கார்டு போலியாக அடித்து வைத்துக் கொள்வார்.
அந்த விசிட்டிங் கார்டில் முன்னணி நிறுவனங்களின் ஜிஎஸ்டி நம்பரை அடித்து வைத்துக்கொள்வார். அந்த விசிடிங் கார்டை வாட்ஸ் அப் போன்ற இணையதளங்களில் பகிர்வார். அந்த விசிட்டிங் கார்டில் உள்ள சீனிவாசன் நம்பரை அழைத்து, தங்களுக்கு என்ன பொருள் வேண்டுமோ அதனைச் சிலர் ஆர்டர் செய்வார்கள். அப்படி ஆர்டர் செய்யும் பொழுது, சீனிவாசன் விசிட்டிங் கார்டில் உள்ள ஜிஎஸ்டி நம்பரை வைத்துக்கொண்டு, தான் தரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த கேட்டுக்கொள்வார்.
தாங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் எதுவாயினும் அதனை டெலிவரி செய்ததாக போலி ட்ராவல் பில்லை, நுகர்வோருக்கு அனுப்பி விடுவார். பின்னர் பணம் கணக்குக்கு வந்து சேர்ந்து விடும். அதன் பிறகு பொருள் வரும் என காத்திருந்த நுகர்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். அப்போது டெலிவரி ஆகவில்லை என்று கேட்டால், பார்சல் இரண்டொரு நாளில் டெலிவரி என்று சொல்லி சுவிட் ஆஃப் செய்துவிடுவார்.
அப்போது ஜி.எஸ்.டி நம்பரை வைத்து அது பதிந்திருக்கும் விலாசத்தை எடுத்துக்கொண்டு அங்குச் சென்று பார்த்தால், சம்மந்தமே இல்லாத கம்பெனி இயங்கி வரும். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொள்வர்.
இதேபோல் போலி ரூபாய் தாள்களை சீனிவாசன் அச்சடிப்பதாகப் புகார் எழுந்திருக்கின்றன. 10, 20, 50, 200, 500 உள்ளிட்ட மதிப்பில் போலி தாள்களை அச்சடிப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சீனிவாசன் போலீசில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றி வந்துள்ளார்.
சமீபத்தில் மட்டும் 10 நம்பரை மாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து போலி விசிட்டிங் கார்டுகள், ரூ.1,500 மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள், பிரிண்டர், 3 செல்போன்கள் , 15 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு ஜிஎஸ்டி நம்பரில் மட்டும் ரூ.1.24 லட்சம் மோசடி செய்ததும், இதுபோல் லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.