கரூரை சேர்ந்த கைத்தறி உரிமையாளரான ரவி செல்வம் என்பவரிடம் போலீஸ் எனக் கூறி மர்மநபர்கள் அழைத்துச் சென்று, ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை வந்த கைத்தறி உரிமையாளரிடம் போலீஸ் எனக் கூறி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் ரவி செல்வம் (38), கைத்தறி உரிமையாளரான, இவர் அடிக்கடி தொழில் நிமித்தமாகக் கோவை வருவது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் தங்குவார்.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர் அங்குத் தங்கினார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அங்கு வந்த சிலர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கரூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அன்றிரவு ரவி செல்வம் மீண்டும் கோவை திரும்பினார். அடுக்குமாடிக்குடியிருப்புக்குச் சென்ற போது, அங்கு அலமாரியில் வைத்திருந்த முக்கியமான ஆவணங்கள், ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ரவி செல்வம் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவி செல்வத்தை விசாரணைக்கு என அழைத்துச் சென்றவர்கள் யார்? திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.