கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 17 அடியாக சரிந்துள்ளதால், பில்லூர் அணையில் இருந்து தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கோவை: உலகின் சுவை மிகுந்த தண்ணீர் சிறுவாணி தண்ணீர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மூலிகை செடி, கொடிகளை கடந்து மண் வாசம் சுமந்து, சுவையுடன் இருக்கும் நீர் சிறுவாணி. தமிழ்நாடு - கேரளா எல்லையான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கின்ற இந்த சிறுவானி அணை நீரானது, கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்கின்றது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 22 வார்டுகளில் சிறுவாணி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 7 டவுன் பஞ்சாயத்துகள், 10 கிராம ஊராட்சிகளுக்கும் சிறுவாணி அணையே குடிநீர் நீர் ஆதாரம். இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 50 அடி என்றாலும், வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 45 அடி மட்டுமே. நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் அடைமழையே சிறுவாணி அணையின் நீர் ஆதாரமாக இருந்துவருகிறது.
அணையின் நீர்மட்டம் சரிவு
சிறுவாணி அணையைப் பொருத்தவரையில் 45 அடி அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சிலமுறை வரையறுக்கப்பட்ட கொள்ளளவை எட்டினாலும், மழை குறைந்ததன் அடிப்படையில் நீர் இருப்பு சரிந்துவருகிறது. தற்போது சிறுவாணி அணையின் நீர் இருப்பு 17 அடியாக உள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறுவதும் குறைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மழைக்காலங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீர் விநியோகத்திற்காக திறக்கப்படும். ஆனால், அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், கோடை வரை தற்போதைய நீர் இருப்பை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது தண்ணீர் திறப்பு என்பது 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறையே செயல்படுத்தப்படுகிறது. அதுவும் 6.5 கோடி லிட்டர் தண்ணீரை மட்டுமே தற்பொழுது பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படுகிறது.
குடிநீர் விநியோகத்தை சீராக்க அதிகாரிகள் நடவடிக்கை
இந்த நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் தேவை அதிகரித்திருப்பதனால் சிறுவாணியில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பில்லூர் அணையின் தண்ணீரை அதிகாரிகள் நாடியிருக்கின்றனர். சிறுவாணி அணையின் தண்ணீர் விநியோகிக்கப்பட கூடிய இடங்களில், தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அங்கு பில்லூர் அணையின் தண்ணீரை சப்ளை செய்கின்றனர். இதனால் சிறுவாணி தந்த சிரமத்தை பில்லூர் மூலம் அதிகாரிகள் நிவர்த்தி செய்து வருகின்றனர். குறிப்பாக ஒட்டுமொத்தமாக மக்களின் தேவைக்கு செய்யப்பட வேண்டிய தண்ணீர் விநியோகத்தை இரு அணைகளின் உதவியோடு அதிகாரிகள் நிறைவேற்றி வருகின்றனர்.
கோடை மழை கொட்டுமா ? நீர்மட்டம் உயருமா?
சிறுவாணி அணை தற்போது 17 அடியாக இருக்கும் நிலையில், தொடர் வெயிலால் நீர்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலானது அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் கடும் சரிவை சந்திக்கும். இப்படிப்பட்ட நிலையில் கோடை மழை கொட்டினால் மட்டுமே நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
சிறுவாணி அணையின் உயரம் என்பது 50 அடி. ஆனால் தமிழ்நாடு மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அணை அமைந்திருக்கும் இடம் கேரளா என்பதால் இரண்டு மாநில அதிகாரிகளும் சேர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கேரளா அரசு 45 அடி தண்ணீரை மட்டுமே தேக்க அனுமதித்திருக்கின்றது.
50 அடியை முழுமையாக நிரப்பினால் தண்ணீர் பஞ்சம் இருக்காது. ஆனால் கேரளா அரசாங்கம் அணையின் முழு கொள்ளளவையும் நிரப்ப அனுமதிக்காததனால், வரையறுக்கப்பட்ட 45 அடி தண்ணீரையே தேக்கி வைத்திருக்கின்றனர். 45 அடி உயர நீர் மட்டத்திலே அணையின் 100% நீர் இருப்பில் 75% சதவிகிதம் நிரம்பும். ஆனால் எஞ்சிய ஐந்து அடி உயரமே அணையின் 25% தண்ணீர் கொள்ளளவு கொண்டது. ஏனென்றால் அணையின் பரப்பளவு மேல் தரத்தில் மிகவும் அதிகமாக இருப்பதனால் தண்ணீர் பிடிப்பு என்பது மேல் பகுதியிலேயே அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் மழை காலத்தில் ஓரளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியுமென்றாலும், கேரளா அதிகாரிகள் அதிகளவிலான தண்ணீரை அணையின் பாதுகாப்பு என்ற பெயரில் மழைக்காலங்களில் திறந்து விடுகின்றனர். இதனால், கோடை காலத்துக்கான தண்ணீர் சேமிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. தண்ணீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து கேரளா அரசாங்கம் சிறுவாணி அணியின் முழு கொள்ளளவையும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே கோவை வாசிகளின் எதிர்பார்ப்பு.