வால்பாறை அடுத்த அக்காமலை புல் மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள புல்மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து, காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அக்காமலை புல் மலை பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் மாநில விலங்கான வரையாடு, அறிய வகை குரங்குகள், புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன.
மேலும், அக்காமலை புல் மலை பகுதி தொடர் மலையாக கேரளா மாநிலம் மறையூர் மற்றும் மூணார் பகுதி வரை நீள்கிறது. இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் செல்ல தடை விதித்து வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை முதல் அக்காமலை புல்மலையில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் புல் மலைப்பகுதிக்கு சென்று தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.