பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் புதிதாக மின்மயானம் அமைக்க பூமிபூஜை இன்று நடைபெறவிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி உடன் கண்களை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதிதாக அமையவுள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் பல்லடம் நகரத்தில் மின் மயானம் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் பல்லடம் நகராட்சி கூட்டத்தில் 8வது வார்டுக்குட்பட்ட பச்சாபளையத்தில் தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே நவீன எரியூட்டு மின் மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவீட்டு பணிக்கு வந்த அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களை திருப்பி அனுப்பினர். இதனை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவிட்டுப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
இதனிடையே இன்று புதிய மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூமி பூஜை நடத்த கூடாது எனவும் எங்களுக்கு மயானம் வேண்டாம் என கோஷமிட்டபடி பூமி பூஜை நடைபெறும் இடத்தை முற்றுகையிட முயன்ற பொது மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.