கோவை போத்தனூர் மகளிர் காவல் நிலையத்தில் கள்ள தொடர்பில் உள்ள கணவனுக்கு புத்திமதி கூறி சேர்த்து வாழ வைக்கக்கோரி மனு அளித்த பெண்ணை, மகளிர் காவல்நிலைய பெண் எஸ்.ஐ. பிரம்பால் அடித்து விரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கலங்கல் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பத்திரன் (வயது36). தனியார் மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வரும் இவருக்கு லட்சுமி பிரியா (வயது35) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டருகே குடியிருந்து வரும் பெண்ணுடன் பத்திரனுக்கு தவறான தொடர்பு இருந்தது தெரியவர கணவனை மனைவி லட்சுமி பிரியா கண்டித்துள்ளார்.
ஆனாலும் பத்திரன் திருந்தாததால் இம்மாதம் 17ஆம் தேதி மாலை லட்சுமி பிரியா தனது கணவன் பத்திரனுக்கு நல்ல புத்திமதி எடுத்துக் கூறி தன்னுடன் நல்லபடியாக வாழ வைக்குமாறு பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடம் சூலூர் கலங்கல் பகுதி என்ற காரணத்தால் மாவட்ட எல்லை மாறுவதாக கூறி, போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அன்றைய தினமே லட்சுமி பிரியா தனது சகோதரர் மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் போத்தனூர் மகளிர் காவல் நிலையம் சென்று தனது கணவருக்கு அறிவுரை கூறி ஒழுங்காக தன்னுடன் வாழவைக்குமாறு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட மகளிர் போலீசார் 18ஆம் தேதியான மறுநாள் காலை 10 மணிக்கு காவல் நிலையம் வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் மறுநாள் காலை லட்சுமி பிரியா தனது உறவினர்களோடு காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி என்பவர் லட்சுமி பிரியா மற்றும் உடன் இருந்தவர்கள் என்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்று கேட்க அதற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் பதில் கூறவே, தரையில் சென்று அமரும்படி கூறியதாகவும் பின்னர் இனிமேல் இதுபோன்று புகார் ஏதும் கொடுக்க காவல் நிலையம் வரமாட்டேன் என்று எழுதிக் கொடு என கூறியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் உதவி ஆய்வாளர் விஜயலட்சுமிரப்பர் குழாயை எடுத்து சரமாரியாக லட்சுமி பிரியாவை அடித்ததாகவும் பின்னர் அங்கிருந்து விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இடது கை தோள் பட்டை வலது மற்றும் இடது காலில் ரத்த காயம் ஏற்பட்டு வீடு திரும்பிய லட்சுமி பிரியா, கடந்த நான்கு நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து கரடிவாவியில் உள்ள தனது சித்தப்பாவிடம் லட்சுமி பிரியா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் உடலில் காயங்களுடன் லட்சுமி பிரியா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி அடித்து விரட்டிய போத்தனூர் துணை காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட லட்சுமி பிரியா கோரிக்கைவிடுத்துள்ளார்.