கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்து வரும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தகோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை தென்னை விவசாய கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: வடமாநில தொழிலாளர் வருகையை கட்டுப்படுத்த கோரி கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை விவசாய கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இதை நம்பி மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தென்னை நார் தொழில்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வட மாநிலத்தவர்களின் வருகையின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவை மற்றும் தென்னை விவசாயக் கூலி தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வடமாநில தொழிலாளர்களின் வருகையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும், வடமாநில தொழிலாளர்களை உடனடியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
குறைந்த கூலிக்கு வெளி மாநில தொழிலாளர்களை பயன்படுத்துவதால் தென்னை தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும், வட மாநிலத்தவர்கள் நிரந்தரமாக தங்கி வேலை செய்வதால் இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் இந்த போராட்டத்தின் போது, வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும், தென்னை தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், PF, ESI பிடித்தம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு மருத்துவ காப்பீடு செய்து தர வேண்டும், தென்னை தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த முற்றுகை போராட்டம் காரணமாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.