கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கான பணம் இதுவரை வழங்கப்படாத நிலையில், அங்கிருந்து வெளியேற கால அவகாசம் வழங்க வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மண்டியிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: கோவை விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிகளுக்காக சுற்றுப்பகுதி மக்களின் நிலங்கள் மாவட்ட நிர்வாகத்தால் கடந்த ஆட்சியில் இருந்து கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலம் வழங்குவோருக்கு மாற்று இடம் வாங்குவதற்கான தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, காந்திநகர் பகுதி மக்களின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், காந்திநகர் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில், விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக எங்கள் நிலத்தினை குறைந்த அளவில் மதிப்பீடு செய்து கடந்த ஆட்சியாளர்கள் கையகப்படுத்தி விட்டனர். நிலத்தை கையகப்படுத்தும்போது உறுதியளித்தபடி உரிய பணமோ மாற்று நிலமோ இதுவரை வழங்கவில்லை என குறிப்பிட்டு இருந்தனர்.
இன்றைய நாட்களில் நிலத்தினை கையகப்படுத்தும்போது இன்றைய நிலவரப்படி இழப்பீடு வழங்காமல் 7 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்க ஒப்புக்கொண்ட இழப்பீட்டையே வழங்குவதாகவும், இது தற்போதைய பொருளாதார நிலையில் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் அவர்கள் அளித்த இழப்பீட்டைக் கொண்டு மாற்று இடத்தில் வீடு கட்ட இயலாத சூழ்நிலையில், தற்போது தாங்கள் குடியிருக்கும் வீட்டையும் காலி செய்யுமாறு அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் கூறியுள்ள காந்திநகர் பகுதி மக்கள், தாங்கள் இங்கேயே குடி இருக்க மேலும் ஆறு மாத காலம் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக, மனு அளிக்க வந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்டியிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.