கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி சையது முகமது அலி, தனது வீட்டு முன்பு நிறுத்திய காரை காரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். கார் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிவன்புரம் காலனி, வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி.
இவர் திமுகவின் தொழிற்சங்கமான எல்.பி.எப் அமைப்பில் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். மேலும், இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் மற்றும் வாடகை கார் ஓட்டும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சையது முகமது அலி, தனது வீட்டின் முன்பு மகேந்திரா கார் ஒன்றை நேற்று விற்பனைக்காக நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, அந்தக் கார் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார் எரிக்கப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரித்து, தீவைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் வாடகை கார் நிறுத்துவதில் அங்குள்ள சிலருக்கும் சையது முகமது அலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.