பல்லடம் அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் புதிதாக வாங்கிய வீட்டை கூலிப்படையினரை குடி வைத்து அபகரிக்க முயற்சிப்பதாக விவசாயி ராஜேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதிதாக வாங்கியவீட்டில் கூலிப்படையினரை குடிவைத்து வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பல்லடம் அருகேயுள்ள எலவந்தி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ராஜேஷ் குமார். இவர் கடந்த மாதம் சுக்கம்பாளையம் அருள்ஜோதி நகர் என்ற இடத்தில் தனபால் என்பவரிடம் புது வீடு ஒன்றையும் மூன்று சென்ட் காலி இடத்தையும் வாங்கி உள்ளார்.
இன்று புது வீட்டிற்கு வீட்டு ரசீது, வாங்கிக்கொண்டு புதிய மின் இணைப்பு வாங்குவதற்காக தனது புது வீட்டினை பார்வையிட சென்றுள்ளார்.
ஆனால் அவரது வீட்டில் புதிதாக 20 நபர்கள் உள்ளே குடியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார், நீங்கள் யார் எனது வீட்டில் எதற்காக தங்கி உள்ளீர்கள் என விசாரித்துள்ளார்.
அப்போது அந்த வீடு மங்கலத்தை சேர்ந்த ஆனந்த், பத்மநாபன், மகேந்திரன் ஆகியோருக்கு சொந்தமானது எனவும் நாங்கள் அவர்களிடம் வேலை செய்கிறோம் என உள்ளே தங்கி இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடு எனக்கு சொந்தமானது எனவும் உடனே வீட்டை காலி செய்யுங்கள் என ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வீட்டு உரிமையாளர் சொன்னால் தான் நாங்கள் காலி செய்வோம் எனவும் ராஜேஷ் குமார் இடம் அங்கு தங்கியிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு தனக்கு உரிமையானது என்பதற்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளதாகவும் தனது வீட்டை ஆக்கிரமித்து கூலி படையினரை குடி வைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூலிப்படையினரை வெளியேற்றி வீட்டை மீட்டு தருமாறு ராஜேஷ்குமார் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பல்லடம் காவல்துறையினர் புகார் அளித்த ராஜேஷ் குமார் மற்றும் மங்கலத்தை சேர்ந்த ஆனந்த், பத்மநாபன் மற்றும் மகேந்திரன் ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.