கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 50 கோடி ரூபாய் திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பொள்ளாச்சி மேற்கு புறவழி சாலை திட்டம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கனரக வாகனங்கள் சிரமமின்றி செல்லவும் பொள்ளாச்சி அடுத்துள்ள கோவை சாலை ஆட்சிபட்டி முதல் தொடங்கி சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன் முத்தூர், நல்லூர் வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு குறுகிய தார் சாலையாக இருந்ததை விரிவாக்கம் செய்யப்பட்டு புறவழிச்சாலை அமைத்து பாலக்காடு சாலையை சென்றடையும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 50 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், தார் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக கற்களாக தற்பொழுது காட்சியளிக்கிறது. மேலும், வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால், சுமார் பத்து கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு மாற்றுப்பாதையில் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி மேற்கு புறவழிச் சாலை திட்ட பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.