கோபனாரி பிரிவு வனப்பகுதி அருகே மாடுமேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை, வனப்பகுதியிலிருந்து தண்ணீர் குடிக்க வந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
கோவை: வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி யானை தாக்கி உயிரிழந்தார்.
கோவை மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு மூணுகுட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (59). கால்நடைகளை மேய்த்து வந்தார். இந்நிலையில் இன்று தனது மாடுகளை கோபனாரி பிரிவு வனப்பகுதி அருகே மேய்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது மாடுகள் தண்ணீர் தேடி அருகே உள்ள ஓடைக்குச் சென்றுள்ளது. இதையடுத்து மாடுகளை திருப்பிவிட கருப்பாத்தாள் வனப்பகுதிக்குள் சென்றபோது அங்குத் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை கருப்பாத்தாளை தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும் காரமடை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.