திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்த 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றி வந்த 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துள்ளனர்.
இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்றும், வட்டார ஒருங்கிணைப்பாளர்களின் பணி நீக்க ஆணையினை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலககம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மகளிர் திட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு வட்டார மேலாளர் பதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.